நேபாளத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் முன்னாள் கிளர்ச்சிக்காரர்களான மாவோயிஸ்டுகளின் கட்சி பெரும் வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகின்றன.
1996ஆம் ஆண்டு முதல் ஒரு தசாப்த காலம் இந்த மாவோயிஸ்டுகள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் நேபாளத்தில் பதிமூன்றாயிரம் பேர் இறக்கும் நிலை உருவானது. ஆனால் ஒரு புதிய அரசியலமைப்பு நிர்ணய சபையை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட தேர்தலில், இதுவரை வந்த முடிவுகளின்படி ஆகக்கூடுதலான இடங்களை பிடித்த மிகப் பெரிய கட்சியாக அவர்களது கட்சி திகழுகின்றது.
இதுவரை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் சுமார் 190 இடங்களில், மாவோயிஸ்ட்கள் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தொண்டுதொட்டு செயற்பட்டுவரும் நேபாளத்தின் பாரம்பரிய கட்சிகள் மிகவும் பின்னணியில் நிற்கின்றன.
வறுமை நிலையில் இருக்கின்ற இந்த நாட்டில், பொருளாதார வளர்ச்சியை, சடுதியான சமூக மாற்றத்தைக் கொண்டுவருவோம், என்ற எதிர்பார்ப்புக்களை அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், தமது மோசமான பழைய பழக்க வழக்கங்களையெல்லாம் விட்டுவிட்டு, பொருளாதார வளர்ச்சியையும், சமூக மாற்றத்தையும் இவர்கள் கொண்டுவருவார்களா? என்பதுதான், இங்கு இப்போது இருக்கின்ற முக்கியமான கேள்வியாகும்.
மன்னர் பதவி விரைவில் நீக்கப்படும்: மாவோயியவாதிகள் கருத்து
நேபாள தேர்தல்களில் பெருமளவு வெற்றிகளை பெற்றிருக்கும் மாவோயிஸ்ட் கட்சி, அடுத்து அங்கே அமைய இருக்கும் ஆட்சிக்கு தலைமைதாங்கும் என்று தாம் நம்புவதாக, முன்பு கிளர்சிக்காரர்களாக இருந்த மாவோயிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நேபாளத்தின் மன்னர் பதவி இன்னும் மூன்று வாரங்களுக்குள் நீக்கப்படும் என்று மாவோயிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் பாபுராம் பட்டாராய் அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தார்.
நன்றி: பிபிசி
மேலும் விவரங்களுக்கு:
1. The Hindu : Front Page : Maoists win 110 seats
2. Election, and Maoists, Could Transform Nepal - New York Times
3. BBC NEWS | South Asia | India worries over Nepal's future