தமிழகத்துக்கு 2008-2009-ம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடாக 15,500 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய திட்டக்குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆண்டு திட்ட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய தமிழக முதல்வர் கருணாநிதி புதுடெல்லி வருவதாக இருந்தது. உடல்நலக் குறைவு காரணமாக, அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன், திங்கள்கிழமை புதுடெல்லியில் மத்திய திட்டக்குழுத் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அஹ்லுவாலியாவுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசின் தலைமைச் செயலர் திரிபாதி, நிதித்துறைச் செயலர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் அதில் கலந்துகொண்டார்கள்.
முதல்வரின் சார்பில் அவரது உரையை, நிதியமைச்சர் அன்பழகன் வாசித்தார். இந்த நிதியாண்டுக்கு ரூ.15,500 கோடி ஒதுக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால், வளர்ச்சி விகிதத்தை நிலைநிறுத்த வேண்டுமானால், திட்ட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் முதல்வர் தனது உரையில் வலியுறுத்தியிருக்கிறார்.
ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையி்ல், தமிழக அரசு ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்கி வருகிறது. அதேபோல், சமையல் எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருகள் பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்கப்படுவதால், நியாயமான விலையில் பொதுமக்களுக்கு அந்தப் பொருள்கள் கிடைக்கின்றன. இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்று கருணாநிதி யோசனை தெரிவித்திருக்கிறார்.
ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் கேஸ் அடுப்புக்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வழங்கப்பட்டதைப் போன்று இந்தத் திட்டத்துக்கும் மத்திய அரசு உதவ வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழகத்துக்குள் ஓடும் ஆறுகளை இணைக்கு்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியிருக்கிறார்.
மத்திய அதிகாரிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அன்பழகன், தமிழகத்துக்கான ஆண்டு திட்ட ஒதுக்கீடு நாளை முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
நன்றி: தமிழ் பிபிசி
மேலும் விவரங்களுக்கு:
1. The Hindu News Update Service: “Karunanidhi cancels Delhi visit”
2. Plan panel, Tamil Nadu agree on Rs 16,000 cr outlay for 08-09 : Policy -Economy - News - The Economic Times