பொருளாதாரம் | சற்றுமுன்...




குவைத் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுமா?

August 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, குவைத், தொழிலாளர்கள் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

குவைத் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுமா?

குவைத் நாட்டில் சமீபத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அவர்கள் எண்ணிக்கையை குறைக்கலாமா என்று அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.

தொழிலாளர்கள் போராட்டம்

குவைத் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் சமீபத்தில் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபம் கொண்ட அந்த நாட்டு அரசு, வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கலாமா என்பது பற்றி பரிசீலனை செய்து வருகிறது.

வெளிநாட்டு தொழிலாளர்களில் வங்காளதேசத்தினரின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

850 வங்காளதேசத்தினர்

சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபட்டு உள்ள வங்காளதேசத்தை சேர்ந்த 850 தொழிலாளர்கள் அவர்களின் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதே போல வன்முறையில் ஈடுபட்டு உள்ள இன்னொரு நாட்டைச்சேர்ந்த தொழிலாளர்களும் திருப்பி அனுப்பப்பட இருக்கிறார்கள்.

வங்காளதேசத்தை சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்கு முன்பு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த நாட்டு தலைவர்கள் வற்புறுத்தலின்பேரில் தான் இந்த தடை நீக்கப்பட்டது.

குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்

அதோடு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கவும் திட்டமிட்டு உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் தேர்தல் நடத்தப்பட்டது.

சுத்திகரிப்பு வேலைக்கு குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ.6ஆயிரம் (40தினார்கள்)நிர்ணயிக்கலாம் என்ற அரசாங்கத்தின் திட்டத்துக்கு ஆன்லைன் தேர்தலில் பெரும்பாலானவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

புதிய விசா

விசிட் விசா என்ற புதிய விசா முறையை அறிமுகப்படுத்துவது பற்றியும் குவைத் பரிசீலித்து வருகிறது. அரபு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்களுக்காக பிசினஸ் விசாவை அறிமுகப்படுத்தவும் அந்த நாடு பரிசீலித்து வருகிறது.


கடிவாளம் இல்லா “கடன் அட்டை’ கலாசாரம்

August 4th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், பொருளாதாரம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கடிவாளம் இல்லா “கடன் அட்டை’ கலாசாரம்

சென்னை, ஆக 3 : கடன் அட்டை வியாபாரம் கடிவாளம் இல்லாத குதிரையைப் போல மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் ஒரு கோடி மக்கள் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இதைப் பயன்படுத்தும் பத்து லட்சம் மக்களில் சென்னையில் மட்டும் ஏழு லட்சம் பேர் உள்ளனர். மாதத்திற்கு பத்து கோடி ரூபாய் தமிழ்நாட்டிலிருந்து கடன் அட்டை வட்டியாக வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலும் பெருநகரங்களில் வசிக்கும் மக்களே இதற்கு எளிதில் அடிமையாகிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்னைகளை அறியாத நடுத்தர மக்களும் இதில் சிக்கித் தவிக்கின்றனர்.

எல்லா வங்கிகளும் கடன் அட்டைகளை எளிதில் வழங்குகின்றன. இதற்கென்று விளம்பரம், தொலைபேசியில் மூளைச் சலவை என பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி மக்களை இவ்வட்டைகளை வாங்கச் செய்கின்றனர். இவ்வட்டைகளின் மூலம் எந்தப் பொருள்களையும் கடனில் வாங்கலாம். முழுப் பணத்தையும் உடனே வங்கிக்குச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மாதா மாதம் குறைந்தபட்ச கட்டணத்தை மட்டும் கட்டினால் போதும் எனக்கூறி, விருப்பம் இல்லாதவர்களின் மீதும் இது திணிக்கப்படுகிறது.

இவ்வட்டைகளை பயன்படுத்துவோர் கட்ட வேண்டிய கடன் தொகையை 45 நாட்களுக்குள் கட்டி விட்டால் பிரச்னை ஏதும் இல்லை. பணம் கட்ட வேண்டிய நாளில் கட்டத் தவறினால் அதற்கென்று தனி வட்டி வசூலிக்கப்படுகிறது. வேறுசில பெயர்களிலும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

ஆண்டுக் கட்டணம் ஆயுள் காலத்திற்கும் இலவசம் என்று கூறி ஓராண்டு முடிந்ததும், நாம் கண்காணிக்காவிட்டால் கட்டணப் பிடித்தம் செய்கின்றனர். வட்டி விகிதம் அதிகரிப்பதன் மூலம் மாதா மாதம் செலுத்தும் குறைந்தபட்ச கட்டணத்தில் பெரும்பாலான கட்டணம் வட்டிக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் ஒரு மனிதனின் ஆயுள் காலம் முழுவதும் கடன் தொல்லையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்படுகிறது. ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் அட்டையை வாங்குகின்றனர். இவர்கள் தனி நபர் கடனையும் விட்டுவைப்பதில்லை. இப்படியாக இவர்களின் கடன் எல்லையை தாண்டுகிறது. கடன் அட்டைதாரர்களின் மாத சம்பளத்தையும் வங்கியிலிருந்து தவணை என்ற பெயரில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பணம் கட்டாதவர்களிடமிருந்து பணத்தை வசூலிப்பதற்காக நியமிக்கும் குழுக்கள் மற்றும் அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி வீட்டிற்குள் சென்று அங்குள்ள பொருள்களைக் கொண்டு செல்வதும், தரக்குறைவாகப் பேசுவதும் எல்லை தாண்டுகிறது. இப்பிரச்னை காவல்துறை மற்றும் நீதிமன்றங்கள் தலையீட்டால் குறைந்தாலும் மறைமுகமாக தொடர்கிறது என்பதே உண்மை.

இதனால் மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கடன் அட்டைகளை பத்திரமாக பாதுகாப்பதும் அவசியமானது. ஏனென்றால் அதைத் தவறவிட்டால் வேறு யாரும் அதைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

வங்கிகளின் “இதர வருமானம்’ ஆறாயிரம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் கடன் அட்டைகளின் பேரில் பல்வேறு விதமாக மக்களிடம் சுரண்டப்படுவதுதான் என்ற குற்றச் சாட்டும் எழுந்துள்ளது. கடன் அட்டை பயன்படுத்துவோர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் சென்னை கடன் அட்டை பயன்படுத்துவோர் சங்கத்தின் செயலாளர் சபரி பெருமாள் கூறியதாவது:

கடன் அட்டைகளின் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும். கடனை வசூலிக்கச் செல்லும் குழுக்களைத் தடை செய்ய வேண்டும். ஒரு மாநிலத்தில் உள்ளவர்களின் மீது வேறு மாநிலங்களில் வழக்கு தொடரக்கூடாது. கடன் அட்டை தொடர்பான வழக்குகளை சிவில் வழக்குகளாகப் பதிவு செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, இந்திய நிதி அமைச்சகம், இந்திய அரசு ஆகிவைகளிடம் வலியுறுத்தவுள்ளோம் என்றார். கடன் அட்டை வியாபாரத்தை முறைப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களிடம் கடனட்டை விதிமுறைகளை வெளிப்படையாக தெரிவிக்க சட்டம் மற்றும் விதிமுறைகளை உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டால்தான் கடன் அட்டை என்ற கடிவாளம் இல்லாத குதிரை, நுகர்வோர் பயணிக்கும் குதிரை வண்டிப் பயணமாக மாறும்.


அலட்சியத்தால் வீழ்ச்சி அடைந்துவரும் தமிழக கதர் வாரியம்!

July 18th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், அறிவிப்பு, சமூகம், சுற்றுச்சூழல், தொழில், பொருளாதாரம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அலட்சியத்தால் வீழ்ச்சி அடைந்துவரும் தமிழக கதர் வாரியம்!

அதிகாரிகளின் அலட்சியத்தால் தமிழக கதர் வாரியம் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த கதரின் பெருமையை நாடு உணர்ந்திட அமைக்கப்பட்ட வாரியத்தின் வீழ்ச்சியைக் கண்டு நாட்டுப் பற்றாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தோடு, 1960 - ம் ஆண்டு தமிழ்நாடு கதர் வாரியம் தொடங்கப்பட்டது.

தேன், சோப்பு உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை தரத்துடன் தயாரித்து விநியோகித்து வருகிறது. ஆனால், நலிந்துவரும் இந் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் இப்போது மெதுவாக மூடப்பட்டு வருகின்றன.

“”கைமுறை காகிதங்கள் தயாரிக்கும் 20 யூனிட்டுகளில் தற்சமயம் இரண்டு யூனிட்டுகள் மட்டுமே செயல்படுகின்றன. மூடிய யூனிட்டுகளை உயர் நீதிமன்றம் திறக்க உத்தரவு பிறப்பித்தும் இதுவரை திறக்கவில்லை.

19 சோப்பு யூனிட்டுகளில் இரண்டைத் தவிர மீதி யூனிட்டுகளில் வேலை செய்பவர்களுக்கு மாதத்தில் 7 அல்லது 10 நாள்கள் மட்டுமே வேலை உள்ளது. இதனால் இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தினக்கூலிகள் போல் சம்பளம் கொடுக்கிறார்கள். சோப்பு உற்பத்தியாளர்களை நிரந்தரம் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் வழக்கை 23 ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளனர்” என்று குற்றம் சாட்டினார் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.சந்திரசேகரன்.

பெயரளவுக்கு மட்டுமே… வணிகம் அல்லாத அலுவலகப் பணிகள் செய்யும் ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசு கொடுக்கிறது. ஆனால் துறையின் முன்னேற்றத்துக்கும் வருமானத்துக்கும் காரணமான உற்பத்தியாளர்களையும், தொழிலாளர்களையும் உற்பத்தி செய்த பொருள்களை விற்றால்தான் சம்பளம் என வாரியம் அறிவித்தது.

“”கதர் நூல் நூற்பு ஆலைகளும் பெயரளவில் செயல்பட்டு வருகின்றன. மூத்த கதர் நெசவாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குகிறது. மேலும் அவர்கள் மாதம் ரூ.5 ஆயிரத்துக்கு தேன், சோப்பு முதலிய மற்ற பொருள்களை விற்றால்தான் அந்த ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

இதனால் பலர் இத்தொழிலை கைவிட்டு விட்டனர். ஆனால் கதர் வாரியமானது வெளியிலிருந்து கதர் துணிகளை வாங்கி கதரின் முத்திரை வைத்து விற்கிறது. அதிகாரிகளின் மெத்தனப்போக்கே கதர் வாரியத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்” என்றார் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.எல்.ஸ்ரீதர்.

பல கதர் நூற்பு ஆலைகள் மூடப்பட்டுவிட்டதால் கதர் வாரியம் வெளியிலிருந்து கதர் துணிகளை வாங்கி கதரின் முத்திரை வைத்து விற்கப்படுகிறது. அதே போன்று கதர் வாரியத்தின் மற்ற பொருள்கள் தனியாரிடம் கொடுத்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“”கதருக்கு என தனித்துறை இருந்தும் தொழிலாளர்களுக்கு நன்மைகள் கிடைக்கவில்லை. லட்சக்கணக்கில் இருந்த தொழிலாளர்கள் இன்று ஆயிரக்கணக்காகக் குறைந்து விட்டனர். அதிகாரிகளின் முறையற்ற நிர்வாகம்தான் இதற்கு காரணம்”" என்றார் சந்திரசேகரன்.

என்ன செய்யலாம்…? அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகளை நீக்க வேண்டும். கதர் துறையை முன்னேற்றும் நோக்குடன் செயல்படும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் கிராம மக்கள் மத்தியில் மறுமலர்ச்சி ஏற்படும். கதர் வாரியமும் அதன் வீழ்ச்சியில் இருந்து மீளும்.

மருத்துவமனைகளில் சோப்பு, ஃபினாயில் போன்ற பொருள்கள் தனியாரிடமே வாங்கப்படுகின்றன. கதர் வாரியத்தின் உற்பத்திப் பொருள்களை அரசுத் துறைகள் அனைத்தும் வாங்கிவிட்டாலே வாரியம் வீழ்ச்சியில் இருந்து மீண்டுவிடும் என்று தொழிலாளர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். ஏற்றுக் கொள்ளுமா அரசு?


வெளிநாட்டில் பொலிவிழந்து வரும் எல்ஐசி

July 7th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், உலகம், சவூதி, துபாய், பொருளாதாரம், வணிகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

வெளிநாட்டில் பொலிவிழந்து வரும் எல்ஐசி

காப்பீட்டுத்துறையில் இந்தியாவில் முன்னணியில் விளங்கிவரும் அரசுத் துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சமீப ஆண்டுகளாக வெளிநாடுகளில் வர்த்தகத்தை இழந்து வருகிறது.

வெளிநாடுகளில் எல்ஐசி-யின் ஆண்டு வர்த்தகம் தொடர்ந்து குறைந்து வருவதிலிருந்தே இதை உணர முடியும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் எல்ஐசியின் வெளிநாட்டு வர்த்தகம் 12 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது.

2004-05ம் நிதி ஆண்டில் முதல் பிரீமியமாக வசூலான தொகை ரூ. 123.41 கோடி. இது அடுத்த ஆண்டு ரூ. 120.8 கோடியாகவும் கடந்த ஆண்டு 2007 மார்ச்சில் 108.67 கோடியாகவும் குறைந்துள்ளது.

வெளிநாட்டு நிறுவன போட்டிகளைச் சமாளிக்கத் தவறியதால் எல்ஐசி வருவாய் குறைந்து வருகிறது. மேலும் புதிய வாடிக்கையாளரை ஈர்ப்பதற்கு எல்ஐசி தவறிவிட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல தனிநபர் காப்பீட்டுத் திட்டங்களும் போதிய அளவுக்கு விற்பனையாகவில்லை. 2004-05-ம் ஆண்டில் பஹ்ரைனில் தனிநபர் பாலிசி விற்பனை குறைந்துள்ளது. இருப்பினும் பழைய பாலிசிகளை புதுப்பிப்பது உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. முதல் பிரீமியம் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எல்ஐசி. ஆசிய நாடுகளில் கிளைகளைத் தொடங்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் எல்ஐசி ஈடுபட்டுள்ளது.

இது தவிர, சவூதி அரேபியாவில் வர்த்தகத்தை மேம்படுத்த சவூதி இந்திய கூட்டுறவு நிறுவனத்துடன் கூட்டு வணிகம் செய்ய திட்டமிட்டு அதற்கான சான்றிதழையும் பெற்றுள்ளது எல்ஐசி. தற்போது எல்ஐசி நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஏமன், நேபாளம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் எல்ஐசி நிறுவனத்துக்கு 2007-08-ம் நிதி ஆண்டில் முதல் பிரீமியமாக வசூலான தொகை ரூ. 59,182 கோடி.
 
 


டீசல் பற்றாகுறை: பலபாடசாலைகள் மூடல்

July 2nd, 2008 பகுப்புகள்: தமிழ்நாடு, போக்குவரத்து, போராட்டம், விலைவாசி | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

சென்னை மற்றும் அதன் சுற்றுபுற நகர்களில் இயங்கிவரும் பிரமாண்ட பொறியியல், மருத்துவ கல்லூரிகள், டீசல் பற்றாக்குறை காரணமாக மாணவர்களைக் கூட்டிவர பேருந்துகளை இயக்க முடியாததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குறிப்பாக புறநகர்களில் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளுமே உள்ளூர் மாணவர்களை நம்பி செயல்படுபவைஅல்ல. இக்கல்லூரிகளில் 30 சத விகித மாணவர்கள் மட்டுமே ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்களில் பெரும்பாலோர் கல்லூரிகள் இயக்கும் வாகனங்களிலும், வெகு சிலர் மட்டும் இரு சக்கர வாகனங் களிலும் கல்லூரிக்குச் சென்று வருகின்றனர்.
டீசல் சப்ளை சீராகும் வரை இனி பேருந்துகளை நிறுத்தி வைக்கலாம், கல்லூரிகளையும் மூடி வைக்கலாம் என நிர்வாகங்கள் முடிவெடுத்து அறிவிப்பாகவும் வெளியிட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிகள் மூடப்படுவதாக நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
எஸ்ஆர்எம் போன்ற பெரிய கல்லூரிகள் மட்டும் தங்கள் கல்லூரி பேருந்துகளுக்கென்று தனியாக வளாகத்துக்குள்ளேயே பங்க் வைத்துள்ளன. அதாவது மொத்தமாக டீசல் வாங்கி இருப்பு வைத்துள்ளன. ஒரு வேளை இன்னும் சில தினங்கள் இதே நிலை நீடித்தால் அனைத்துக் கல்லூரிகளுமே மூடப்பட்டாலும் வியப்பில்லை.


பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மத்திய அமைச்சர் அறிவிப்பு

June 4th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சமூகம், தகவல், பொருளாதாரம், பொருளாதாரம், மத்திய அரசியல், வணிகம் | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா இன்று தெரிவித்தார்.

வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தல் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை. இந்த விலை உயர்வுகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.

எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் ரூ. 2.2 லட்சம் கோடியைத் தாண்டியது. என அரசு அறிவித்துள்ளது அதன் அடிப்படையில் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் விலையேற்றத்தின் காரணமாக இந்த விலை உயர்வு என்ற காரணம் சொன்னாலும் நமது நாட்டில் உற்பத்தி செய்து விற்கப்படும் பெட்ரோலுக்கும் இந்த விலை உயர்வு அமல் செய்யப்படுகிறது என்பதும் உண்மை.

எண்ணை விலையேற்றம் இதனால் நட்டம் என காரணம் காட்டினாலும் இறுதியில் இந்த எண்ணை நிறுவன்ங்கள் பலகோடி இலாபக்கணக்கையே கடந்த காலங்களில் காட்டியுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம் எட்டு சதவிகிதத்தை எட்டிவிட்ட்தாக மத்திய அரசே ஒப்புக்கொண்டாலும் உண்மையில் பணவீக்க விகிதம் இதைவிட அதிகமாகவே உள்ளது. என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் இந்த பெட்ரோல் உயர்வு மேலும் விலையேற்றத்திற்கு காரணமாக பணவீக்க விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.