தலித் மக்களின் குரல் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ துறையில் எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி ஆணையிட்ட மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் அன்புமணிக்கு பாராட்டு விழா சென்னையில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நடந்தது.
விழாவில் தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் மலைஜாதியினர் கமிஷன் தலைவர் பூட்டாசிங் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணிக்கு சமூகநீதி விருது மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு விருது ஆகியவற்றை வழங்கினார். விழாவில் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி பேசியதாவது:-
அகில இந்திய அளவில் மருத்துவத்துறையில் 1200 மாணவர்களுக்கு மத்திய அரசு இடஒதுக்கீடு வழங்கி உள்ளது. இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகை அல்ல, உரிமை ஆகும். எனக்கு என் பெற்றோர் சமூக நீதி பாலை ஊட்டி வளர்த்தார்கள். அவர்கள்தான் சமூக நீதிக்கு பாடுபட வேண்டும் என்று காலம் காலமாக கூறினார்கள். மந்திரி பதவி ஏற்றபோதும் அதைத்தான் கூறினார்கள்.
இரண்டு சமுதாயமும் ஒற்றுமையாக இணையவேண்டும். நம்மை 40 ஆண்டாக தமிழகத்தில் பிரித்து ஆண்டார்கள். இனிவரும் காலத்தில் அது நடக்காது. இது காலத்தின் கட்டாயம். இது வரை மற்றவர்களிடம் கேட்டோம். நாம் இணைந்தால் மற்றவர்களுக்கு கொடுக்கும் நிலையில் இருப்போம். அது நிச்சயம் வரும்.
இந்தியாவின் முதன்மை மருத்துவ கழகத்தில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பிரித்தாளப்படுவதை, அந்த மாணவர்களே என்னிடம் கூறியபோது அதைக் கேட்டு எனக்குள் ஆத்திரம் ஏற்பட்டது. உத்திர பிரதேசத்தில் மாயாவதி வென்றதைப்போல, தமிழகத்தில் நாம் இணைந்தால் வெற்றி பெறமுடியும். நிச்சயம் அது நடக்கும்.
தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வரவேண்டும். நிச்சயம் அது வரும். நீதித்துறையில் இடஒதுக்கீடு வரவேண்டும். இது மிக முக்கியமான ஒன்று ஆகும். அது வராவிட்டால் சமூகநீதியும், நியாயமான நீதியும் நமக்கு கிடைக்காது. அதற்கு நாம் இணைந்து பாடுபடவேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் தாம்பரத்தில் உள்ள சித்தமருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பண்டிதர் அயோத்திதாசர் சிலை திறக்கப்படும். மருத்துவதுறையில் இடஒதுக்கீட்டை கொண்டுவர எவ்வளவோ சிரமப்பட்டேன். 2 ஆண்டுகளாக அதிகாரிகளை அழைத்து சண்டைபோட்டு, எந்த பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேன். அந்த சமயத்தில் கூட பலர் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள்.
விழாவில்
- கேரம் உலக சாம்பியன் இளவழகி,
- பளுதூக்கும் வீரர் அன்பு
ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
- இ.பொன்னுசாமி எம்.பி.,
- விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்,
- ஜெயக்குமார் எம்.எல்.ஏ.,
- டி.யசோதா எம்.எல்.ஏ.,
- பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி,
- அருந்ததி பேரவை வலசை ரவிச்சந்திரன்,
- தெற்கு ரெயில்வே எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் அ.ஞானசேகரன்,
- ஏ.கே.மூர்த்தி எம்.பி.,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக அனைவரையும் கூட்டமைப்பின் காப்பாளர் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி வி.செல்வராஜ் வரவேற்றார்.
நன்றி: தினத்தந்தி