கேரளாவைச் சேர்ந்த செரோட்டை பாரதி என்ற பெண்ணின் கணவர் இறந்து விட்டார். கணவரின் மரணத்திற்குப்பின் பாரதி வேறொரு வரை திருமணம் செய்து கொண்டார். எனினும், முதல் கணவர் மறைந்தாலும் தனக்கு அவரது சொந்தில் பங்கு உண்டு என்று பாரதி உரிமை கோரினார்.
ஆனால் இன்னொருமுறை அவர் திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு முதல் கணவரின் சொத்தில் பங்கு உரிமை கிடையாது என்று செரோட்டே சுகாதன் என்பவரும், சட்டப்பூர்வமான மற்ற வாரிசுகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
1856-ஆம் ஆண்டு இந்து விதவைகள் திருமணச் சட்டப்படி மறைந்த தனது கணவரின் சொத்தில் பாரதி பங்கு கேட்க முடியாது என்று வழக்கும் தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு சிவில் நீதிமன்றத்திலும் பின்னர், கேரள உயர்நீதிமன்றத்திலும் நடந்தது. அப்போது இரண்டு நீதிமன்றங்களுமே ‘இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி முதல் கணவரின் சொத்தில் பாரதிக்கு பங்கு உண்டு’ என்று தீர்ப்பு கூறி மனுதாரர்களின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்தன.
இதை எதிர்த்து செரோட்டே சுகாதனும், சட்டப் பூர்வமான மற்ற வாரிசுகளும் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.பி. சின்கா, பி.எஸ். சிர்புர்கர் ஆகியோர் கொண்ட பெஞ்ச் நேற்று (19.2.2008) தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிபதிகள் இருவரும் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். இதற்கு முன்பு பல்வேறு வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகளை மேற்கொள்காட்டிய நீதிபதிகள் கூறியதாவது:
இந்து திருமணச் சட்டம் ஒரு விதவைப் பெண்ணுக்கு, மறைந்த கணவரின் சொத்தை ஆளும் முழு உரிமையையும் அளிக்கிறது. அந்த பெண் மறு திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக மறைந்த கணவரின் சொத்தில் அவருக்கு உள்ள உரிமையை பறிக்க முடியாது. 1956-ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமை சட்டம், ஏற்கெனவே இருந்த இந்து சட்டத்தில் கடலளவு மாற்றங்களைக் கொண்டு வந்து விட்டது. இதன்படி ஆண் வாரிசுதாரர்களுக்கு சமமாக இந்து விதவைகளும் பாவிக்கப்படுகின்றனர்.
மேலும், இந்து விதவைகள் மறுமணச் சட்டம் உள்ளிட்ட எந்த இந்து சட்டத்தையும்விட இந்து திருமணச் சட்டத்தின் 9-ஆம் பகுதி பெண்களுக்கு அதிக உரிமைகளை வழங்கியிருக்கிறது. எனவே மனுதாரர்களின் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறோம்.
நன்றி: விடுதலை
முந்தைய சற்றுமுன்: இரண்டாம் மனைவியின் பிள்ளைகளுக்குச் சொத்துரிமை உண்டு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மேலும் விவரங்களுக்கு:
1. Widows can get share of property after remarrying: SC - India - The Times of India
2. Deccan Herald - Remarriage: SC relief to widows: “A widow who remarries cannot be deprived of a share in her dead husbands property, the Supreme Court has ruled.”