மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற புகழ்பெற்ற நடிகர்கள் மற்றும் தலைவர்களை அவமானப்படுத்தும் விதமாக செய்திகள் வெளியிடுவது அல்லது தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடக்கிறது.
சமீபத்திய ஆனந்தவிகடனில், எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் குறித்து மூத்த எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது.
அதில், எம்.ஜி.ஆர் தன் இறுதி நாட்களில் பேச முடியாமல் அவதிப்பட்டதைக் கிண்டலடித்து எழுதியிருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரதப் போராட்டமும் நடந்தது. நடிகர் சங்க செயலாளர் ராதா ரவியும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். இந் நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் சங்கமும் தலையிட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சரத்குமார் மற்றும் செயலாளர் ராதா ரவி கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில்:
இந்திய திரையுலகின் சகாப்தங்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவரையும் தரக் குறைவாக எழுதப்பட்ட கட்டுரையை வெளியிட்டு வார இதழ் தனது பாரம்பரியத்துக்கு களங்கம் தேடிக் கொண்டுள்ளது.
அந்தக் கட்டுரையை அந்த இதழுக்காக அவர் எழுதியதல்ல. தனது மன வியாதியைக் காட்ட ஏதோ ஒரு இணையதள பிளாக்கில் கிறுக்கிய எழுத்துக்கள் அவை. அதை தானாக வலியச் சென்று வார இதழ் வெளியிட வேண்டிய அவசியமென்ன?.
இந்தப் போக்கை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இதுமட்டுமல்ல, தொலைக்காட்சியிலும் இதுபோன்ற அநாகரிக செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. இவற்றுக்கு நமது கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் வரும் மார்ச் 9ம் தேதி நடிகர் சங்கத்தின் சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது.
சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.
வார இதழையும் எழுத்தாளரையும் கண்டித்து இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.
ரஜினி, கமல், உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
நன்றி: தட்ஸ்தமிழ்