இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா அருகே இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 15 பேர் இன்று நுழைந்தனர். மேலும், அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று மாலை 3.30 மணியளவில் குப்வாரா அருகே அவர்கள் எல்லைக் கோட்டை தாண்டி இந்தியப் பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு நௌகான் செக்டரில் உள்ள கண்காணிப்பு முகாமை இந்திய ராணுவத்தினர் காலி செய்ய வேண்டும் என்று கோரினர். மேலும், திடீரென இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 22வது ராஜ்புத் படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார்.
இதையடுத்து, இந்திய வீரர்களும் திருப்பிச் சுட்டனர். இந்த மோதல் சில மணிநேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பகுதிக்குள் 15 பேர் கொண்ட குழுவாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்திருப்பது, அரசியல் மற்றும் ராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில தலைநகர் லாகூரில் இன்று காலை 9:30 மணிக்கு டெம்பிள் தெருவில் அமைந்துள்ள அந்நாட்டு குற்ற ஆய்வு நிறுவனமான பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியின் தலையகத்தினுள் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட சரக்குந்து ஒன்று அத்துமீறி நுழைந்து வெடித்ததில் 19 பேர் பலியானார்கள்.வெடிப்பின் பாதிப்பில் அந்த ஏழு மாடிக்கட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளது.