கூவம் கரையில் ஒரு “சோமாலியா’
ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பானுமதி தனது தாயின் மடியில்.
சென்னை, ஆக. 7: சென்னை கூவம் கரையில் ஒரு சோமாலியாவின் பரிதாபக் காட்சி மனதை கலங்க வைக்கிறது.
ஆட்டோமொபைல் உபகரணங்களுக்கு பெயர் போன புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் சாலை ஓரத்தில் எவ்வித அரவணைப்பின்றி பரபரப்பாக ஓடும் வாகனங்களை ஏக்கமும், தவிப்புமாகப் பார்க்கும் குழந்தை பானுமதிக்கு வயதோ மூன்றரை.
கை, கால்கள் தளர்ந்தும், சுருங்கி போன பானுமதியை பார்க்கும் பெற்றோர்களுக்கு சற்றே மனது நொருங்கிப் போய்விடும்.
நன்றாக ஓடி, ஆட வேண்டிய குழந்தை முறையான பராமரிப்பின்றியும், சத்தான சாப்பாடு இல்லாமல் ஊட்டசத்துக் குறைபாட்டால் முடங்கிப் போய் நகர முடியாமல் இருக்கிறாள்.
கூவத்தையொட்டி குடிசை வீடு அமைத்து தங்கியுள்ள அவரது தாய் வைரமும், தனது குழந்தையைச் சரியாகப் பராமரிப்பதில்லை. கணவரால் கைவிடப்பட்ட வைரம், குப்பை பொறுக்கியும், வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்கிறார். சம்பாதிக்கும் 50 ரூபாய் போதவில்லை என்கிறார் வைரம். இதனால் பானுமதிக்கு சத்தான உணவை வாங்கிக் கொடுக்க முடியாத நிலை. சாலை ஓரத்தில் பானுமதியை பார்த்து இரக்கப்படும் பலர் கொடுக்கும் உணவுப் பொருளே அவளுக்கு அரு மருந்து.
ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகளை அரசு மருத்துவமனைக்கு கூட சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாதது வறுமையின் பரிதாப நிலை. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மிஞ்சிப் போனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட கிடையாது.
பெற்ற தாய் இருந்தும், கவனிப்பின்றி தவிக்கும் பானுமதி என்ன தவறு செய்தார்?…பாவம்!



