விளையாட்டு துறையை மேம்படுத்த மக்கள் பங்களிப்பும் அவசியம் | சற்றுமுன்...




விளையாட்டு துறையை மேம்படுத்த மக்கள் பங்களிப்பும் அவசியம்

விளையாட்டு துறையை மேம்படுத்த மக்கள் பங்களிப்பும் அவசியம்
அமைச்சர் மைதீன்கான் பேச்சு

தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்த மக்கள் பங்களிப்பும் அவசியம் தேவை என்று கோவையில் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற செயற்கை இழை ஓடுதள தொடக்க விழாவில் அமைச்சர் மைதீன்கான் பேசினார்.

கோவை நேரு விளையாட்டரங்கில் ரூ.21/2 கோடி மதிப்பில் 400 மீட்டர் செயற்கை இழை ஓடுதளம் (சிந்தடிக் டிராக்) அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று காலை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரபாகரன் வரவேற்று பேசினார்.

தமிழக சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் கலந்துகொண்டு புதிய ஓடுதளத்தையும், புல்வெளி கால்பந்து மைதானத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

மக்கள் பங்களிப்பு அவசியம்

1972-ம் ஆண்டு முதல்-அமைச்சராக கருணாநிதி பொறுப்பில் இருந்தபோது கோவையில் நேரு விளையாட்டரங்கம் தொடங்கப்பட்டது. அதற்கு பிறகுதான் சென்னையில் நேரு விளையாட்டரங்கம் தொடங்கப்பட்டது. பார்வையாளர்கள் அமர்ந்து காணக்கூடிய அளவில் முழு காலரியுடன் அமைக்கப்பட்ட முதல் விளையாட்டரங்கம் என்ற பெருமையை கோவை நேரு விளையாட்டரங்கம் பெற்றது.

விளையாட்டு துறைக்கு இந்த ஆட்சியில் அதிக நிதி தரப்படுகிறது. அரசு என்னதான் நிதி கொடுத்தாலும் மக்கள் பங்களிப்பு என்பது மிகவும் அவசியம். அப்போதுதான் விளையாட்டு துறையை சிறப்பாக செயல்படுத்த முடியும். விளையாட்டு துறைக்காக தனது தொகுதி நிதியை தருவதாக இங்கு அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. மக்கள் பிரதிநிதிகள், ஆர்வலர்கள், விளையாட்டு சங்கத்தினர் ஆர்வம் இருந்தால்தான் தமிழக விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களை சிறந்த வீரர்களாக மாற்ற முடியும்.

நீச்சல் குளம்

தி.மு.க அரசு விளையாட்டு துறை மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 10 மாவட்டங்களில் நீச்சல் குளம் இருந்தது. இந்த ஆண்டு 75 லட்சத்தில் விழுப்புரத்தில் பணி நடந்து வருகிறது. விளையாட்டு துறை சார்பில் விளையாட்டரங்கம் மற்றும் நீச்சல் குளம் ஏற்படுத்த அரசு தயாராக இருக்கிறது. ஆனால் அதற்குரிய இடம் மாநகராட்சியிலோ, உள்ளாட்சி அமைப்புகளிலேயே இருக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்தவும், தேவையான வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாகவும் அதிகாரிகளிடம் பேச உள்ளோம்.

இதுபோன்ற செயற்கை ஓடுதளம் அமைக்க 3 கோடி ஆகிறது. இதேபோல் மதுரை மற்றும் சென்னையில் செயற்கை ஓடுதளம் இருக்கிறது. இதன் உழைப்பு 6 அல்லது 7 ஆண்டுகள் மட்டும் வரும் என்கிறார்கள். இந்த ஆண்டு திருச்சியில் ஆக்கி மைதானம் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் ரூ.3 கோடியே 10 லட்சத்தில் விளையாட்டு வீரர்கள் விடுதி கட்டப்படுகிறது.

மினி ஸ்டேடியம்

ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மினி ஸ்டேடியம் அமைக்க 15 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு 5 இடங்களில் பணிகள் முடிந்தது. அதேபோல் கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டு தேர்வு செய்யப்பட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் கோவை சூலூரில் பயிற்சி வழங்க ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடலோர மீனவர்களின் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி, களைக்கூத்தாடிகளின் குழந்தைகளுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ஒரு நாட்டின் சிறப்பு எது என்று பார்த்தால் தற்போது ஒலிம்பிக் விளையாட்டுகளில் எந்த நாடு அதிக பதக்கம் வென்றது என்றுதான் பார்க்கிறார்கள். அந்த வகையில் சிறந்த வீரர்களை உருவாக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம். ஒலிம்பிக் மற்றும் பிற விளையாட்டுகளில் சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.3 கோடியே 15 லட்சம் ஊக்க தொகை வழங்கி வருகிறோம். வலுவான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையோடு சத்துணவில் தற்போது 3 முட்டை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் கூறினார்.

விழாவில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

உள்விளையாட்டரங்கம்

ஒலிம்பிக்கில் அதிகம் பதக்கம் பெறும் நாடுதான் வலிமையான நாடு என்கிறார்கள். அந்த வகையில் அமெரிக்கா, சீனா, பிரான்சு உள்ளிட்ட நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட நம் நாட்டவர்கள் அதிக பதக்கம் பெறமுடியவில்லை. ஆனால் மக்கள் தொகை குறைந்த நாடுகளில்கூட வீரர்கள் அதிக பதக்கம் குவிக்கிறார்கள்.

கோவையில் ஒரு உள்விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும் என்று தி.மு.க அரசு ரூ.5 கோடி ஒதுக்கியது. ஆனால் அப்போது இருந்த மேயர் கோவையில் இடம் இல்லை என்று கூறிவிட்டார். அந்த நிதி தற்போது செலவு செய்யப்பட்டு இருக்கலாம். அதனால் விளையாட்டு துறை அமைச்சர் தற்போது ரூ.10 கோடி ஒதுக்கித்தந்து உள்விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும். சாயிபாபா காலனியில் குப்பை கிடங்கு பகுதியில் பள்ளிக்கூடம் வருகிறது என்கிறார்கள்.

அந்த பள்ளிக்கூடத்தின் அருகில் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். மேலும் சர்வதேச தரத்துடன் கூடிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க வேண்டும். கோவையில் உள்விளையாட்டரங்கம் அமைப்பதற்காக எனது தொகுதி நிதியில் இருந்து ரூ.3 கோடியை ஒதுக்கி தர தயாராக உள்ளேன். இன்னொரு தொண்டு நிறுவனம் 2 கோடி ஒதுக்குவதாக கூறி உள்ளது. அரசு அங்கு உள்விளையாட்டரங்கம் அமைக்குமானால் கோவையில் உள்ள வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் பங்குபெறுவதற்கான பயிற்சிகள் அளிக்க ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறினார்.

கலந்துகொண்டோர்

விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ம.ரா.மோகன் திட்ட விளக்க உரையாற்றினார். மாநகராட்சி ஆணையாளர் வி.கே.சண்முகம், மேயர் வெங்கடாசலம், சர்வதேச கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், துணை மேயர் நா.கார்த்திக், மண்டல தலைவர் பைந்தமிழ்பாரி, மாவட்ட தலைவர் சி.ஆர்.ராமச்சந்திரன், வெ.ந.உதயகுமார், நாச்சிமுத்து, முன்னாள் எம்.பி.க.ரா.சுப்பையன், கவுன்சிலர்கள் கார்த்திக் செல்வராஜ், தமிழ்செல்வி, அசோக்குமார், ராஜேந்திரபிரபு, யமுனாதேவி, மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உமாபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிகளை செய்திமக்கள் தொடர்பு உதவி அலுவலர் தமிழ்மொழி அமுது தொகுத்து வழங்கினார். முடிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் மேரி ராஜாத்தி நன்றி கூறினார்.

 

 

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்