பா.ம.க. துணை பொதுச்செயலாளர் கைது
பா.ம.க. துணை பொதுச்செயலாளர் கைது
ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக போலீஸ் நடவடிக்கை
ரூ.17 லட்சம் மோசடி புகாரில் பாட்டாளி மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.
ரியல் எஸ்டேட் அதிபர் புகார்
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 42). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ராஜபாளையத்தில் நோயாளிகளுக்கு பயன்படுத்தும் காட்டன் துணி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நான் நடத்தி வருகிறேன். இந்த நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக எனக்கு கோடிக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. அப்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த காளிதாஸ் (வயது 32) என்பவருடைய அறிமுகம் கிடைத்தது. அவர் பாட்டாளி மக்கள் கட்சியில் மாநில துணை பொதுச்செயலாளராக உள்ளார்.
எனக்கு தேவைப்படும் பணத்தை வங்கியில் கடனாக வாங்கித் தருவதாக அவர் கூறினார். வங்கி ஒன்றில் ரூ.1 கோடி பணம் வாங்கித் தருவதாக கூறி கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை ரூ.17 லட்சத்து 18 ஆயிரம் ரொக்கப் பணத்தை அவர் கமிஷன் தொகையாக கொஞ்சம், கொஞ்சமாக பெற்றார்.
சென்னை எம்.எல்.ஏ. விடுதி வளாகத்தில் வைத்து இந்த பணத்தை நான் கொடுத்தேன். அவர் சொன்னபடி வங்கியில் ரூ.1 கோடி கடன் வாங்கித் தரவில்லை. நான் கொடுத்த கமிஷன் பணத்தை திருப்பி கேட்டேன் அந்த பணத்தையும் திருப்பி தர மறுத்து விட்டார். கடன் வாங்கித் தராமல் என்னிடம் வாங்கிய ரூ.17 லட்சத்து 18 ஆயிரத்தை மோசடி செய்து விட்டார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை-கைது
இந்த புகார் மனு தொடர்பாக செனëனை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் விஜயகுமாரி, உதவி கமிஷனர் செல்வரசு ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தார்.
நேற்று காலையில் காளிதாஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது “சங்கரநாராயணனும், நானும் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்தோம் என்றும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் சங்கரநாராயணனுக்கு பணம் கொடுக்க முடியாமல் போய் விட்டது என்றும், நான் மோசடி எதுவும் செய்யவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
காளிதாஸ் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது கேரளாவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரும் புகார் தெரிவித்துள்ளார். அந்த பெண் டாக்டரிடமும் ரூ.1 கோடி வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.3 லட்சம் கமிஷன் வாங்கி மோசடி செய்து விட்டதாகவும் காளிதாஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுபற்றியும் மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
குறிச்சொற்கள்: துணை, பாமக, பொதுச்செயலாளர், கைது
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
August 6th, 2008 at 9:04 am
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பார்வையில் சமம்தானா?
அது ஏன் இப்போதுதான் சட்டத்தின் (கழக அரசின்) கண்கள் பா.ம.க.வினரின் மேல் பட்டிருக்கிறது?