பதவி போனால் விலாசமும் போய்விடும்: அமைச்சர்களுக்கு விஜயகாந்த் பதில் | சற்றுமுன்...




பதவி போனால் விலாசமும் போய்விடும்: அமைச்சர்களுக்கு விஜயகாந்த் பதில்

பதவி போனால் விலாசமும் போய்விடும்: அமைச்சர்களுக்கு விஜயகாந்த் பதில்

பதவி போனால் விலாசமும் போய்விடும் என்று தமிழக அமைச்சர்களுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பதில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கச்சத்தீவு பிரச்னையில் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகக் குரல் கொடுப்போம் என்று தி.மு.க. உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியுள்ளார்.

ஆனால் அதேநேரத்தில் மீனவர்களுக்காக ராமேஸ்வரத்தில் தேமுதிக நடத்திய போராட்டம் குறித்து அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் என்னை விமர்சித்துள்ளனர்.

எனது விலாசத்தைத் தேட முயற்சிப்பதாகவும், பைத்தியக்காரன் என்றும், உடை அணியாத நாடகம் நடத்துவதாகவும் வசைபாடியுள்ளனர்.

கச்சத்தீவு ஒப்பந்தம் 1974-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிறகு, நமக்கு வழங்கப்பட்ட உரிமைகள் நெருக்கடி காலத்தில் பறிக்கப்பட்டன. ஆனால், அன்று முதல் இன்று வரை கடந்த 34 ஆண்டுகளில் மீனவர்களுக்காக முதல்வர் கருணாநிதி என்ன செய்தார் என்று மக்கள் கேட்கமாட்டார்களா? மீனவர்கள் வடித்த கண்ணீர் கருணாநிதிக்குத் தெரியவில்லையா?

கருணாநிதியின் ரிமோட் கண்ட்ரோலில்தான் மத்திய அரசு இயங்குவதாக அமைச்சரே பேசியிருக்கிறார். அப்படியானால் அதை இயக்கி கச்சத்தீவை மீட்டிருக்கலாம் அல்லவா? அதை விடுத்து கடலோர மாவட்டங்களில் தி.மு.க. உண்ணாவிரதம் இருப்பது மக்களை ஏமாற்றும் நாடகம் அல்லவா?

நான் ராமேஸ்வரத்தில் என்ன பேசினேன் என்பது பெருவாரியான பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்பட்ட பிறகும் திரித்துப் பேசுகிறார்கள். நல்ல மனம் படைத்தவர்கள் நான் பேசியதை நல் உணர்வோடு ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஏழை மக்கள் மீது பைத்தியம்: “பைத்தியக்காரன்’ என்று என்னை சொல்கிறார்கள். பைத்தியக்காரர்களில் பலவகை உண்டு. சிலருக்கு பண பைத்தியம், சிலருக்கு பதவி பைத்தியம், இன்னும் சிலருக்கு செங்கோல் பைத்தியம், ஆனால் எனக்கோ ஏழை மக்கள் மீது பைத்தியம். ஆகவே என்னை அவ்வாறு அழைத்ததில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை.

விலாசம் தேடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை: “”மீனவர்கள் பொழிந்த கண்ணீர் எந்த அளவிற்கு என்னை வேதனைப்படுத்தியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்று ஒருபக்கம் முதல்வர் கருணாநிதி அங்கலாய்க்கிறார்.

மறுபக்கம் கடலுக்குச் செல்லமாட்டோம் என்று உண்ணாவிரதம் இருக்கும் ஏழை மீனவர்கள் நிலை கண்டு நான் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அதை விலாசம் தேடும் முயற்சி என்று கொச்சைப்படுத்துகின்றனர்.

விலாசம் தேடவேண்டிய அவல நிலையில் நாட்டு மக்கள் என்னை வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் பலருக்கு விலாசம் தேடித்தரும் நிலையிலேயே என்னை மக்கள் வைத்துள்ளனர்.

ஆனால் பதவி போனால் பலர் விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள் என்பது மட்டும் உறுதி” என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
 

குறிச்சொற்கள்: , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்