சென்னை : இடிக்கப்படுகிறது கலைவாணர் அரங்கம்
இடிக்கப்படுகிறது கலைவாணர் அரங்கம்
1954-ல் சட்டப் பேரவைக் கூட்ட அரங்கமாக சில காலம் செயல்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கலைவாணர் அரங்கம் 2 மாதங்களில் இடிக்கப்பட உள்ளது.
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு உள்பட பல முக்கியத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்த அரங்கமாக அது விளங்கி வருகிறது. சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ளது கலைவாணர் அரங்கம். பல்வேறு அரசு மற்றும் தனியார் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கமாக இருந்து வருகிறது.
தற்போது, புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட உள்ளதால் கலைவாணர் அரங்கம் இடிக்கப்படுகிறது.
1954 முதல்…1954-ல் சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறும் அரங்கமாக செயல்பட்டு வந்தது. பின்னர், 1957 - ம் ஆண்டு அந்த அரங்கத்துக்கு “பாலர் அரங்கம்’ என்று நேரு பெயர் சூட்டினார். குழந்தைகளின் கலை - இலக்கிய நிகழ்ச்சிகள் அந்த அரங்கத்தில் நடைபெற்றன.
குழந்தைகள் தொடர்பான திரைப்படங்களும், நல்ல தரமான ஆங்கிலப் படங்களும் திரையிடப்பட்டன. குழந்தைகளோடு, அப்பகுதியில் உள்ள பொது மக்களும் அரையணா, ஓரணா கொடுத்து திரைப்படங்களைக் கண்டு ரசித்தனர்.
கால ஓட்டத்தில்…காலம் செல்லச் செல்ல மக்களின் ரசனை மாற ஆரம்பித்தது. இதனால், பாலர் அரங்கத்தில் திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. அதை வர்த்தக ரீதியிலான அரங்கமாக மாற்ற அரசு முடிவு செய்தது.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில், குறைந்த கட்டணத்தில் நாள் கணக்கு அடிப்படையில் அரங்கத்தை வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டது.
1974 ஜனவரி 29-ம் தேதி அரங்கத்தின் பெயரை “கலைவாணர் அரங்கம்’ என்று மாற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதி அதைத் திறந்து வைத்தார்.
அதற்கான கல்வெட்டு அரங்க மேடையின் இரு புறங்களிலும் இப்போதும் காட்சி அளிக்கிறது.
செப்டம்பர் வரை மட்டுமே…
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அருகே உள்ள காலியிடத்தில் 3 ஆயிரம் இருக்கைகள் கொண்ட புதிய அரங்கம் கட்டப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல் அளித்த நிகழ்ச்சிகளை முடிக்க வசதியாக செப்டம்பர் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று கலைவாணர் அரங்க நிர்வாகிகள் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அரசும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளதால், 2 மாதங்களில் கலைவாணர் அரங்கக் கட்டடம் இடிக்கப்படும். “கலைவாணர் அரங்கம்’ வரலாற்றில் முக்கிய நினைவுச் சின்னம் என்கின்றனர் அப்பகுதியில் வசிக்கும் மூத்த குடிமக்கள்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்