தாய் மொழியைக் காக்க ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும்: குமரி அனந்தன் பேச்சு | சற்றுமுன்...




தாய் மொழியைக் காக்க ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும்: குமரி அனந்தன் பேச்சு

மொழிக்காக ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும்: குமரி அனந்தன் பேச்சு

தாய் மொழியைக் காக்க ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று இலக்கியப் பேச்சாளர் குமரி அனந்தன் வலியுறுத்தினார்.

கோவை இளங்கோ அடிகள் இலக்கிய மன்றத்தின் சிலப்பதிகார வெள்ளி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தென்காசி திருவள்ளுவர் கழகத் தலைவர் ச.கணபதிராமனுக்கு டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் விருதை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வழங்கினார்.

இவ் விழாவில் இலக்கியப் பேச்சாளர் குமரி அனந்தன் பேசியது:

பாராளுமன்றத்தில் ஒரு காலத்தில் துணைக் கேள்விகள் ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ தான் கேட்க வேண்டும். நான் எம்.பி.யாக இருந்தபோது தமிழில் மீண்டும் மீண்டும் கேள்வியை எழுப்பினேன். அதற்காக பலமுறை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன். சளைக்காமல் தமிழ் மொழிக்காகக் குரல் கொடுத்ததால், மொழி குழு அமைக்கப்பட்டு, பாராளுமன்றத்தின் வாதாடும் மொழிகளில் தமிழும் இணைந்தது.

1992-ல் உலகப் பொது மொழியின் அவசியம் குறித்து பாரீஸ் நகரில் உள்ள யுனெஸ்கோ அமைப்புக்கு கடிதம் எழுதினேன். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏதேனும் நாடு உலகப் பொது மொழியை குறித்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று யுனெஸ்கோ எனக்குப் பதில் எழுதியது.

ஐ.நா. சபையில் இத்தீர்மானத்தைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்துக்குக் கடந்த 16 ஆண்டுகளாக ஏராளமான கடிதங்களை அனுப்பி உள்ளேன். இதுநாள் வரை அக் கடிதங்களுக்குப் பதில் கூட வரவில்லை. இந்த நிலையில் தான் தமிழ் இருக்கிறது. மொழிக்காக ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும்.

இளங்கோ அடிகள் இலக்கிய மன்றத் தலைவர் ஜி.கோபாலன்: சிலப்பதிகாரத்தின் முதல் அச்சுப் பதிப்பு 1892-ம் ஆண்டு உ.வே.சாமிநாத அய்யரால் வெளியிடப்பட்டது. இந்நூல் வெளியான எட்டே ஆண்டுகளில் முதன் முதலாக பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செக்கோஸ்லோவியா, ரஷியா, மலையாளம், ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் வெளிவந்தன. அத்தகைய சிறப்பு மிக்க ஒரே காவியம் சிலப்பதிகாரம் தான்.

கம்பன் காவியத்துக்கும், இளங்கோ அடிகளின் காவியத்துக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கம்பனின் ராமகாதையில் கம்பனின் கவிநயமும், கற்பனை வளமும் தான் மேலோங்கி நிற்கும். கம்பன் வரிக்கு வரி நீக்கமற நிறைந்திருப்பான். ஆனால் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் தன்னை மறைத்துக் கொண்டு தனது கதையின் நாயகர்களுக்கு முன்னுரிமை தருவார். இது தான் வித்தியாசம்.

செயலர் நா.நஞ்சுண்டன்: இளங்கோ அடிகள் இலக்கிய மன்றம் பல ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த ரூ.1 லட்சம் நன்கொடையுடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ் ஆர்வலர்கள் மூலம் இன்னும் ரூ.10 லட்சம் நன்கொடை கிடைத்தால் இலக்கிய மன்றத்தையும், சிலப்பதிகார விழாவையும் ஒவ்வோர் ஆண்டும் இன்னும் சிறப்பாக நடத்த முடியும் என்றார்.

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்