தமிழகம் முழுவதும் இலவச டியூசன் சென்டர்கள்: சூர்யா
தமிழகம் முழுவதும் இலவச டியூசன் சென்டர்கள்: சூர்யா
தான் நடத்தி வரும் அகரம் கல்வி அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் இலவச டியூசன் சென்டர்கள் அமைக்கப்படும் என நடிகர் சூர்யா தெரிவித்தார்.
நடிகர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த 28 ஆண்டுகளாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெறும் மாணவ மாணவியருக்குப் பரிசுத் தொகை வழங்கி வருகிறார். இதன் 29-ம் ஆண்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் மாணவ மாணவியருக்கு ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கி சிவகுமார் பேசியதாவது:
1979-ம் ஆண்டு தொடங்கிய சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் இயன்றவரை கல்விக்காக உதவிகளைச் செய்து வருகிறேன். தற்போது சூர்யா அந்தப் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிப்புக்காக எவ்வளவு சிரமங்களை அனுபவிப்பார்கள் என்பதை உணர்ந்தவன். கல்விக்காக செய்யும் உதவியால்தான் எனக்கு மன நிறைவு ஏற்படுகிறது. வருங்காலங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களின் வாழ்வில் கல்வி விளக்கேற்ற முயற்சிப்போம் என்றார்.
விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:
கடந்த 29 ஆண்டுகளாக என் தந்தை செய்து வரும் சேவையைப் பார்த்துதான் “அகரம் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கினேன். இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கல்வி உதவிக்காக வழங்கப்பட்டு வருகிறது.
இந்தக் கல்வியாண்டு முதல் மாணவ, மாணவிகளுக்காகத் தமிழகம் முழுவதும் இலவச டியூசன் சென்டர்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் அகரம் அறக்கட்டளை சார்பில் அரசுப் பள்ளிகளில் நூலகம், கிராமப்புற பள்ளிகள் உள்ள ஊர்களில் பள்ளிகளின் வளர்ச்சிக்காக “கல்வி உதவிக்குழு’ போன்றவற்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்றார்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்