ஒவ்வொரு ஊரிலும் இலக்கிய மன்றங்கள் தொடங்க வேண்டும்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் வலியுறுத்தல்
ஒவ்வொரு ஊரிலும் இலக்கிய மன்றங்கள் தொடங்க வேண்டும்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் வலியுறுத்தல்
ஒவ்வொரு ஊரிலும் இலக்கிய மன்றங்கள் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார்.
கோவை இளங்கோ அடிகள் இலக்கிய மன்றத்தின் 25-ம் ஆண்டு சிலப்பதிகார வெள்ளி விழாவை சனிக்கிழமை தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியதாவது:
தமிழ் மண்ணில் மூவேந்தர்கள் ஆட்சி செய்ததை விளக்கும் சான்று சிலப்பதிகாரம் மட்டுமே. எத்தனையோ இலக்கியங்கள் இருந்தாலும் சங்க இலக்கியத்துக்கும், பிற்பட்ட காலத்துக்கும் மிகப் பெரிய பாலமாக சிலப்பதிகாரம் அமைந்துள்ளது.
ஆங்கிலத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள். ஆனால், இந்தியாவை விட மிக மிக முன்னேறிய ஜப்பானில் யாரும் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை. தங்களது மொழி, கலாசாரத்தை காக்கும் அடிப்படை உணர்வு ஜப்பானியரிடம் உள்ளது. தமிழில் பேசினால் தரக்குறைவு, தமிழில் படித்தால் கேவலம் என்ற மாயை நம்மிடம் மட்டும் தான் இருக்கிறது.
உலகின் மிகப் பெரிய காவியங்கள், விஷயங்கள் ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை. பகவத்கீதை, பைபிள், திருக்குர்ரான், திருக்குறள், ஏன் காந்தி அடிகளின் சத்தியசோதனை என இவை அனைத்துமே ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
எழுத்து பணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால், அது ஆபத்தின் அறிகுறி. மொழியை பணம் என்ற அளவுகோலை வைத்து எடைபோடக் கூடாது. தமிழ் வளர வேண்டும் என்றால், தமிழ் உணர்வு இருக்க வேண்டும். அதற்காக ஆங்கிலம் வேண்டாம் என்றோ, ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை என்றோ அர்த்தமல்ல.
தென்னாப்பிரிக்க தமிழர்கள் தமிழ் நன்றாகப் பேசுவார்கள், ஆனால், எழுதத் தெரியாது. இதனால், தமிழை ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்கின்றனர். இந்த நிலை தமிழகத்துக்கு வந்துவிடக் கூடாது என்று பயமாக இருக்கிறது.
இந்த நிலைமை மாற இலக்கியக் கூட்டங்கள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஊரிலும் நடத்த வேண்டும். இதுஇல்லாமல் போனதற்கு சமயத்தை மறந்ததுதான் காரணம். மதம் என்பது இலக்கியத்தை, தமிழை வளர்க்க முக்கியக் காரணமாக இருந்தது. மதத்தை அடிப்படையாக வைத்து தமிழ் பேசப்பட்டது. தமிழ் இலக்கியங்கள் பேசப்பட்டன. மதம் சார்ந்த இலக்கியமாக இருந்தபோது மொழி காப்பாற்றப்பட்டது.
முன்பெல்லாம் திருவள்ளுவர் கழகம், கம்பன் கழகம், திருப்புகழ் மன்றம், இலக்கியப் பேரவை என்று ஊருக்கு ஊர், ஆலயத்துக்கு ஆலயம் இருந்தன. அங்கெல்லாம் இலக்கிய விவாதங்கள் நடந்தன. அந்த நிலைமை மீண்டும் வர வேண்டும். தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க செய்கிறோமோ இல்லையோ, ஊருக்கு ஊர் இலக்கியக் கழகங்கள் தொடங்கி செயல்பட வேண்டும் என்றார் அவர்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்