மே 28-ல் குடியரசு நாடாக அறிவிக்கப்படுகிறது நேபாளம்? | சற்றுமுன்...




மே 28-ல் குடியரசு நாடாக அறிவிக்கப்படுகிறது நேபாளம்?

மே 28-ல் குடியரசு நாடாக அறிவிக்கப்படுகிறது நேபாளம்?

240 ஆண்டுகால மன்னராட்சி நிறைவுக்கு வருகிறது

வரும் 28-ம் தேதி குடியரசு நாடாக நேபாளம் அறிவிக்கப்பட உள்ளது. பாரம்பரிய மன்னர் அரண்மனையில் இருந்து மன்னர் ஞானேந்திரா, 27-ம் தேதி வெளியேறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

240 ஆண்டுகாலமாக நேபாளத்தில் மன்னராட்சி நீடித்து வந்தது. மன்னராட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அந்நாட்டு மக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் பெரும் போராட்டம் நடத்தின. இந்நிலையில், மன்னராட்சியை முடித்துக் கொள்ள ஞானேந்திராவும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து கிரிஜா பிரசாத் கொய்ராலா தலைமையில் 8 கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, நாட்டில் ஜனநாயகம் மீண்டும் மலரச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்… கடந்த ஏப்.10-ம் தேதி நேபாள அரசியல் நிர்ணய சபைக்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், மாவோயிஸ்டுகள் அதிக தொகுதிகளில் வென்று முன்னணி பெற்றனர்.

ஆட்சி அமைக்கும் அளவுக்கு அவர்கள் பெரும்பான்மை கிடைக்காததால் இதர கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மே 28-ல்… இதன் ஒருபகுதியாக வரும் 28-ம் தேதி, அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்தை கூட்டி அன்றே நேபாளத்தை குடியரசு நாடாக அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நேபாள கம்யூனிஸ்ட் துணைத் தலைவர் பாபுராம் பட்டாராய் தெரிவித்தார்.

மன்னரின் மருமகனுடன் பிரசண்டா சந்திப்பு: இதன் முக்கிய கட்டமாக, ஞானேந்திராவின் மருமகன் ராவ் பகதூர் சிங்கை மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மன்னர் மாளிகையை காலி செய்வது, குடியரசாக நாடு அறிவிக்கப்படுதல், மன்னருக்கு மாற்று மாளிகை அளித்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
 

குறிச்சொற்கள்: , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “மே 28-ல் குடியரசு நாடாக அறிவிக்கப்படுகிறது நேபாளம்?”

  1. […] மே 28-ல் குடியரசு நாடாக அறிவிக்கப்படுக… […]

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்