உறவினருக்கு பரிந்துரை: அமைச்சர் பூங்கோதை ராஜினாமா
லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய தனது உறவினரை காப்பாற்றுவதற்காக ஏடிஜிபியிடம் பரிந்துரை செய்த விவகாரத்தில், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் துணை இன்ஜினியர் ஜவஹர் என்பவர் சமீபத்தில் லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கினார். இவர் அமைச்சர் பூங்கோதையின் உறவினர் ஆவார். ஜவஹரை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்றும்படி, தமிழக ஏடிஜிபி உபாத்யாயாவை அமைச்சர் பூங்கோதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் அடங்கிய சிடியை, ஜனதா தளம் தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆதாரத்துடன் வெளியிட்டார். இதுகுறித்து கவர்னரிடமும் அவர் புகார் செய்தார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் பேரவையில் இன்று எழுப்பிய பிரச்சனைக்கு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தற்போதைய விஞ்ஞான யுகத்தில் ஒருவர் பேசுவதை மற்றொருவர் பதிவு செய்வது எளிதானது. எனினும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியுடன் பேசியதாக செய்தி வருவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அமைச்சர் என்பது வேதனையை தருகிறது.
இதற்கு பொறுப்பேற்று தனது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் பூங்கோதை அனுப்பி வைத்துள்ளார். உறவினரை காப்பாற்ற முயற்சிக்கும் செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று. தனது தவற்றை உணர்ந்து அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அவரது ராஜினாமா கடிதம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து வேறொரு விசாரணைக் குழு தேவையா? அல்லது தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்கும் குழுவே போதுமா? என்பது குறித்தும் பரிசீலனை செய்யப்படுகிறது.
லஞ்சம் வாங்குவோருக்கு ஆதரவாக செயல்படுவது குற்றம் ஆகும். நிச்சயம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது.
இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
நன்றி: எம்.எஸ்.என் & யாஹு
மேலும் விவரங்களுக்கு: Tamil Nadu minister quits after expose - National News – News – MSN India - News
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்