இலங்கை கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் உட்பட 12 பேர் பலி
அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இலங்கையின் மேல்-மாகாணத்திலுள்ள கம்பஹா மாவட்டத்தில் ஞாயிறு காலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதலொன்றில் இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே உட்பட சுமார் 12 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஞாயிறு காலை கம்பஹா மாவட்டத்தில் வலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த சிங்கள-தமிழ் புத்தாண்டையொட்டிய மராதான் ஓட்டப்போட்டியொன்றில் பிரதான விருந்திரனாக கலந்துகொண்டிருந்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே, அந்த ஓட்டப் போட்டியினை தொடக்கிவைப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கிறது.
இதில் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளேயுடன்,
- இலங்கையின் முன்னாள் தடகளவீரரும், தெற்காசிய மராதான் ஓட்டப் போட்டியில் தங்கப்பதங்கம் வென்றிருந்தவருமான கே.எஸ் கருணாரட்ண மற்றும்
- தேசிய தடகளப் பயிற்றுவிப்பாளருமான லக்ஸ்மன் டீ அல்விஸ்
உட்பட சிவிலியன்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 90க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கம்பஹா மாவட்டத்தின் மூத்த பொலிஸ் அதிகாரியான எஸ்.எஸ்.பி. ஹெக்டர் தர்மசிறி உட்பட காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கம்பஹா, மற்றும் ராகம தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் மிகவும் மோசமான நிலையிலிருந்த நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளூர் தொலைக்காட்சிகளில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதையும், அதன் பின்னர் மராதான் ஓட்டப் போட்டியினை ஆரம்பித்து வைக்கும்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையும் விசேட செய்தி அறிவித்தல்களின்போது காண்பிக்கப்பட்டன.
பாதுகாப்புத்தரப்பினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஆனாலும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து இந்தக் குண்டுவெடிப்புக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைக் குண்டுதாரியே காரணம் என்று ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தேசிய தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.
இந்தக் குண்டுத்தாக்குதலையும், அமைச்சரின் படுகொலைச் சம்பவத்தையும் விடுதலைப்புலிகளின் மிருகத்தனமான செயலெனக் கண்டித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக அழிக்கும் தனது அரசின் நடவடிக்கைகளிலும், திடசங்கற்பத்திலும் எவ்வித மாறுதல்களையும் இது ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.
55 வயதான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே ஒரு சட்டத்தரணி ஆவார். 1983ஆம் ஆண்டிலிருந்து ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்ததோடு, தனது அரசியல் வாழ்வில் சிவில் விமானப் போக்குவரத்து, கிறிஸ்தவ விவகாரங்கள், இனவிவகாரம் மற்றும் நல்லிணக்கம் போன்ற பல துறைகளில் பலவருடங்கள் அமைச்சராகவும் பதவிவகித்திருக்கிறார்.
இறக்கும்போது இவர் ஆளும் கட்சியின் பிரதான கொறடாவாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், பொருளாளராகவும் கடமையாற்றியிருந்ததோடு, அடுத்தமாதம் கிழக்கு மாகாணசபைக்காக இடம்பெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலையொட்டி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்துக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிய வருகிறது.
இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் பின்னர் தென்னிலங்கையில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டாவது அமைச்சர் இவராவார். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 8ம் திகதி, அமைச்சரவை அந்தஸ்தற்ற தேசநிர்மாண அமைச்சர் தஸ்ஸநாயக, ஜா-எல பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி: பிபிசி
மேலும் விவரங்களுக்கு:
1. VIRAKESARI ONLINE: “அமைச்சர் மீதான குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணை இரகசிய பொலிஸாரிடம் மரதன் ஓட்டப் போட்டியாளர் போன்றே குண்டுதாரி ஊடுருவல்” | பூரண அரச மரியாதையுடன் வியாழனன்று இறுதிக்கிரியை
2. Pathivu: TAMIL NATIVE! :: பதிவு: தமிழரின் பூர்வீகம்! Tamil: “அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கம்பஹாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலி”
3. TamilNet: 06.04.08 Jeyaraj Fernandopulle killed in bomb blast
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்