ஆப்கானில் அபின் விளைச்சல் அதிகரிப்பு: இந்தியாவில் கண்காணிப்பு தீவிரம்
ஆப்கானில் அபின் விளைச்சல் அதிகரிப்பு: இந்தியாவில் கண்காணிப்பு தீவிரம்
ஆப்கானிஸ்தானில் அபின் செடி விளைச்சல் இந்த ஆண்டு அமோகமாக உள்ளது. இது இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
போரால் சீரழிந்த ஆப்கானிஸ்தானில், ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்களை தயாரிக்க தேவைப்படும் அபின் செடி விளைவிக்கப்படுகிறது. இதன் மூலமே அந்நாட்டுக்கு ஏராளமான வருவாய் கிடைத்து வருகிறது. இங்கிருந்து பல நாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன. ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் அபின் செடி வளர்ப்பில் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர். அபின் செடியில் விளையும் காய் பகுதியில் இருந்து ஓபியம் என்று அழைக்கப்படும் அபின் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் 8 ஆயிரத்து 200 டன் ஓபியம் தயாரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என ஐ.நா., ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளது. தற்போது ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சத்து 93 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அபின் செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. போதை பொருட்களுக்கான உலக சந்தையில் இந்த ஆண்டுக்கான தேவையில் 94 சதவீதத்தை ஆப்கானிஸ்தானே அளிக்க உள்ளது என்பது ஐ.நா.,வின் கணிப்பு. இதனால், இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் உஷார் அடைந்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் கள்ள நோட்டுகள் இந்தியாவுக்குள் கடத்தப்படுகின்றனவா என்பதில் தான் இதுநாள் வரை கவனம் செலுத்தி வந்தனர். ஆனால், எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த உதவி கமாண்டன்ட் ஒருவரே ஊடுருவல்காரர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு போதை பொருள் கடத்தலுக்கு உதவி செய்து இருப்பது தெரிய வந்த பிறகு, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீரர் சிறையில் அடைக்கப்பட்டார். போதை பொருள் கடத்தலை தடுப்பதிலும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களின் கவனம் தீவிரமானது.
எல்லைப் பாதுகாப்பு படையின் டைரக்டர் ஜெனரல் ஏ.கே.மித்ரா கூறியதாவது: எங்கள் வீரர் ஒருவரே போதை பொருள் கடத்தலுக்கு துணை போனார் என்பது அதிர்ச்சி தரும் விஷயம். எனவே போதை பொருள் கடத்தல் தடுப்பு பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் தான் போதை பொருள் கடத்தல் அதிகம் காணப்படுகிறது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 101 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்துள்ளோம். இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகம். போதை பொருள் கடத்தலுக்கு பெண்களை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். பெண்கள் தங்கள் ஆடைப் பகுதிகளில் சிறு சிறு பொட்டலங்களாக போதை பொருட்களை மறைத்து வைத்து எடுத்து வருகின்றனர். சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் உள்ள முள்வேலியின் அந்தப்புறம் இருந்து இந்திய பகுதியை நோக்கி அவர்கள் அந்த பொட்டலங்களை துõக்கி எறிகின்றனர். இங்குள்ளவர்கள் அவற்றை கைப்பற்றி கொள்கின்றனர். இப்படி தான் போதை பொருள் கடத்தல் நடந்து வருகிறது. எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமப் பகுதிகளில் பெண்களை பரிசோதிக்க மாநில அரசு மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இருந்து பெண் போலீசாரை நாங்கள் கேட்டுள்ளோம். இவ்வாறு மித்ரா கூறினார்.
எல்லைப் பாதுகாப்பு படையின் எச்சரிக்கையை போதைப்பொருள் தடுப்பு அமைப்பு பெரிதுப்படுத்தவில்லை. இந்த அமைப்பை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் விளையும் அபின் செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் போதை பொருட்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் தான் கிராக்கி அதிகம். இந்தியாவில் அவ்வளவாக இல்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 350 கிலோ மட்டுமே ஆப்கானிஸ்தானை சேர்ந்தது. இது ஒரு கிலோ ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விலை கொண்டது. இது விலை அதிகம் என்ற காரணத்தினாலும், உள்ளூரில் இதைவிட மலிவு விலையில் போதை பொருட்கள் கிடைக்கின்றன என்ற காரணத்தினாலும் தான் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்படும் போதை பொருட்களுக்கு இந்தியாவில் கிராக்கி இல்லை. எனினும், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சப்ளை செய்ய தான் குறைந்த அளவுக்கு கடத்தி கொண்டு வரப்படுகிறது. எனினும், எல்லைப் பாதுகாப்பு படை உஷார்படுத்தியதில் இருந்து, பாகிஸ்தான் அதிகாரிகளுடன் நாங்கள் பேசியுள்ளோம். போதை பொருள் கடத்தலை தடுக்க அவர்களின் உதவியையும் நாடியுள்ளோம். இவ்வாறு அந்த உயர் அதிகாரி கூறினார்.
ஐ.நா., அமைப்பில் போதைப்பொருட்கள் மற்றும் குற்றம் என்ற பிரிவில் தெற்கு ஆசிய பகுதியின் பிரதிநிதியாக உள்ள கேரி லுõயிஸ் கூறியதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து விமானம் மூலம் சீனாவுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது என்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். சிறிய அளவுகளில் தான் போதை பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் அடிக்கடி விமான பயணம் மேற்கொள்வது எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதை போல உள்ளது. தெற்கு ஆசியாவில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு கொரியர் சர்வீஸ் மூலம் பார்சல்களில் போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன. போதை பொருட்களை தயாரிக்கும் சட்டவிரோத ஆய்வுகூடங்கள் இந்திய எல்லைப்பகுதிகளில் ஏராளமாக தோன்ற தொடங்கியுள்ளன. இவ்வாறு கேரி லுõயிஸ் கூறினார்.
அபின் செடியும் ஆப்கானிஸ்தானும் : ஆப்கானிஸ்தானில் அபின் செடி விளைச்சல் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ஹெக்டேரில் இருந்து ஒரு லட்சத்து 93 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது 17 சதவீத வளர்ச்சி
* ஓபியம் உற்பத்தி 6 ஆயிரத்து 100 டன் என்ற அளவில் இருந்து 8 ஆயிரத்து 200 டன் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஹெராயின் விலை ( ஒரு கிராம்)
* ஆப்கானிஸ்தானில் நுõறு ரூபாய்
* பாகிஸ்தான் மற்றும் ஈரானில் ரூ.140
* துருக்கியில் ரூ.240
* அல்பேனியாவில் ரூ.480
* ஸ்லோவேனியா அல்லது
ஸ்லோவாக்கியாவில் ரூ.720
* ஜெர்மனியில் ரூ.880
* பிரிட்டனில் ரூ.1200
* ரஷ்யாவில் ரூ.1,320
ஹெராயின் தயாரிப்பது எப்படி? : அபின் செடியில் விளையும் விதையை முதல் நாள் இரவு கத்தியால் கீறிவிடுவார்கள். அதில் இருந்து பால் வடிந்து விதையின் மேற்பகுதியில் படிய தொடங்கும். மறுநாள் காலை விதையின் மேற்பகுதியில் படிந்து இருக்கும் பாலை சுரண்டி எடுப்பர். பின்னர் அதை ஆய்வுகூடங்களுக்கு எடுத்து சென்று, ரசாயன பொருட்களை சேர்த்து மார்பைன் என்ற போதை பொருளை உருவாக்குவர். அதை மேலும் மேம்படுத்தி தயாரிப்பது தான் ஹெராயின் என்று அழைக்கப்படுகிறது.
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்